top of page
வீட்டுக் கடன்.jpg

வீட்டுக் கடன்: கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

 

இன்றைக்குச் சொத்து வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே வாங்குகிறார்கள். வீட்டுக் கடனுக்குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் சொந்த வீட்டில் சோகமாக வசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். 

1. மார்ஜின் மணி! 

 

தனி வீடோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ, எதை வாங்குவதாக இருந்தாலும் மொத்த தொகைக்கும் கடன் தரமாட்டார்கள். சுமார் 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் போடவேண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால்,  வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, பெர்சனல் லோன் இஎம்ஐ என அதிகத் தொகை சம்பளத்திலிருந்து போகும். அந்த வகையில் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

 

இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது கடன் தொகையைக் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். மனை வாங்கி வீடு கட்டினால் இப்போது சிறிய வீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்த வீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீட்டுக் கடன் மாத தவணை கைக்குக் கிடைக்கும் சம்பளத்தில் 40-45 சதவிகிதத்தைத் தாண்டாதவாறு இருத்தல் அவசியம்.

 

2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு! 

 

இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எனப்  பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகிறது.  

 

அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்களைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றால் உங்களின் வீடு தேடி வந்து கடனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடுவார்கள்.பொதுவாக, தனியார் வங்கிகள் / தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விடப் பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங் களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.

 

வீட்டுக் கடன் என்பது ஒரு முறை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திருக்கும் இடத்துக்கான தொலைவை பார்க்க வேண்டியதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட்ட காசோலைகளைத் தருவதன் மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங்கலாம்.

 

3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்! 

 

வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்பதைக் கவனிப்பது முக்கியம். கிளை அலுவலகமே கடன் வழங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.வங்கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் 

கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக்

கூட்டத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்க அதிகநாள் ஆகக்கூடும். எனவே, வங்கிக் கிளைகளே கடனுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங்குவது நல்லது.

 

4. கட்டணங்கள் முக்கியம்! 

 

வீட்டுக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம், ஆவணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதக் கட்டணத்தை வசூலிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் எனத் தனியாகக் கட்டணம் வாங்கும் வங்கிகளும் இருக்கின்றன. சில வங்கிகளில், முதலில் வாங்கப்படும் பரிசீலனைக் கட்டணத்திலே இந்த வேலையும் அடங்கிவிடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக்கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

 

5. கான்ட்ராக்டரின் தரம்! 

 

நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர் அல்லது உங்களுக்கு வீடு கட்டித் தரப்போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.

 

6. கடனுக்கான காசோலை!

மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலையை புரமோட்டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் தரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுதான் தரவேண்டும் என்பதை ஆரம்பத்திலே தெரிவித்துவிட வேண்டும். இல்லையெனில் பில்டரோ / கான்ட்ராக்டரோ வீட்டு வேலையைச் சரிவர முடிக்காமல் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை வாங்கிச் சென்றுவிடுவார். எனவே, ஜாக்கிரதை!

 

7. வட்டி விகிதம்! 

 

வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலையான வட்டி என்பது முதலில்வரும் 3 - 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப்போதுள்ள நிலையான வட்டி அல்லது ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

 

ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும்.  நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையே சுமார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நிலை நிலவினால், ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

 

மேலும், நீங்கள் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அதே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்பதையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டுமுறை இருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறையில் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில் எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.

 

8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்! 

 

வாங்கிய கடனை குறைந்த ஆண்டு களில் 5 - 10 ஆண்டுகளில் கட்டினால், மாத தவணை அதிகமாக இருக்கும். இதுவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மாத தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிகமாக இருக்கும். இவற்றை அலசி ஆராய்ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக் கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம்பளம் உயர்ந்தபிறகு அதிகத்  தொகையைக் கட்டுவதன் மூலம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.

 

9. கடன் தொகை வழங்கும் நிலை..

 வீடு கட்டுவது என்றால் அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட்டைக் கட்ட கடன் தொகையை  வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து சர்ட்டிஃபிகேட் தந்தால் தான் அடுத்தநிலைக் கடனைத் தருவார்கள். அப்போது காலதாமதம் ஏற்படக்கூடும். இதுபோன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

 

10. மாரடோரியம் பீரியடு! 

 

வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது எனில் கட்டுமானம் முடிய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரிவாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக்கும். இதனை 'ப்ரீ இஎம்ஐ’ என்பார்கள். இந்த வட்டியை மாதாமாதம் கட்டி வருவது நல்லது.இல்லையெனில் இந்த வட்டியையும் வீட்டுக் கடனாக மாற்றிவிடுவார்கள். நீங்கள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்''.

 

வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர்கள் இந்த 10 விஷயங் களையும் கவனிக்கலாமே!

குறிப்பு

நிலம் அல்லது வீடு வாங்கும்போது  எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத இடத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும்
நாங்கள் உங்களுக்கு எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத நாளடைவில்  உங்கள் முதலீட்டிற்கு நல்ல ஒரு லாபத்தை தரக்கூடிய இடத்தை தேர்வு செய்து தருகிறோம்

                             

bottom of page